கூட்டம் திரைவிமர்சனம்

தமிழ்நாடு, ஆந்திரா இடையேயான வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளாக கிஷோர், நவீன் சந்திரா மற்றும் அவரது கூட்டாளிகள். 

அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆதரவாகவும், போலீசுக்கு எதிராகவும் துப்பாக்கி ஏந்தி போராடுகிறார்கள்.
ஏழு வருடமாக துப்பாக்கி ஏந்தி சண்டை போட்டதில் கிஷோரின் கூட்டாளிகள் பலர் இறந்து போகிறார்கள். இதனால் மனமுடைந்த கிஷோர் போலீசில் சரணடைந்துவிடலாம் என முடிவு செய்கிறார். இதனை ஏற்று கிஷோர், நவீன் சந்திரா உள்பட 22 பேர் போலீசில் சரணடைகிறார்கள்.
கைதாகி சிறைக்கு செல்லும் இவர்களை ஜெயிலர் கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். ஒருநாள் கிஷோர் கூட்டாளிகளில் ஒருவரை கொலையும் செய்துவிடுகிறார். இதனால் கிஷோர் மிகுந்த கவலை அடைகிறார்.
இந்நிலையில் உயர் போலீஸ் அதிகாரியான சாய்குமார் சிட்டியில் கொலை குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளை இவர்களை வைத்து தீர்த்துகட்ட முடிவெடுக்கிறார். அதற்காக கிஷோரிடம் ஒரு ஒப்பந்தமும் போடுகிறார். அதாவது, சிட்டிக்குள் குற்றங்கள் செய்பவர்களை தீர்த்துக்கட்டினால், நீங்கள் சுதந்திரமாக வாழலாம் என்று கிஷோரிடம் கூறுகிறார். இதற்கு கிஷோரும் ஒப்புக்கொள்கிறார்.
அதன்படி, சிறையிலிருந்து விடுதலையாகும் கிஷோர் கூட்டாளிகள் சாய்குமார் கூறியபடி ரவுடி கும்பல்களை களையெடுக்கிறார்கள். சாய்குமாரும் இவர்கள் மீது எந்த வழக்கும் போடாமல் தப்பிக்க வைக்கிறார்.
இந்நிலையில், கிஷோர் அரசியல்வாதியான நாசருக்கு ஒரு நிலப்பிரச்சினையில் தலையிட்டு அந்த டீலை முடித்துக் கொடுக்கிறார். அதில் கிடைக்கும் பணத்தை பங்குபோடும் வேளையில் நிலபுரோக்கர் மொத்தப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிடுகிறார்.
தலைமறைவான புரோக்கரை வரவழைப்பதற்காக அவரது மகளான பியா பாஜ்பாயை கிஷோர் கூட்டாளிகளில் ஒருவரான நவீன்சந்திரா தங்களுடைய கூட்டத்திற்கு அழைத்து வந்துவிடுகிறார். அங்கு வரும் பியா பாஜ்பாயுடன் நவீன் சந்திரா காதல் கொள்கிறார். இருவரும் காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிய போலீஸ் கமிஷனராக வரும் அபிமன்யூ சிங், கிஷோர் கூட்டாளிகளை என்கவுண்டரில் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? நவீன் சந்திராவும், பியாவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
கிஷோர் மிடுக்கான தோற்றத்தில் போராளிகளுக்குண்டான ஆக்ரோஷத்துடன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடன் கூட்டாளியாக வரும் நவீன் சந்திராவும் அவருக்கு போட்டி போடும் அளவுக்கு நடித்திருக்கிறார்.
நாயகியாக வரும் பியா பாஜ்பாய் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும், தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். தங்கள் மக்களின் நலனுக்காக போராடும் மாவோயிஸ்டுகளும் நல்லவர்கள்தான். இவர்கள் போரை கைவிட்டு திருந்த நினைத்தாலும் இந்த சமூகம் அவர்களை நல்லவர்களாக வாழவிடாது என்ற கருத்தை வலியுறுத்தி படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் ஜீவன் கதையில் பளிச்சிட்டாலும், திரைக்கதையில் கொஞ்சம் தொய்வை கொடுத்திருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. சுதாகர் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சும் வலு சேர்க்கிறது.
நடிகர் : நவீன் சந்திரா
நடிகை : பியா பாஜ்பாய்
இயக்குனர் : எம்.ஆர்.ஜீவன்
இசை : ஜேம்ஸ் வசந்தன்
ஓளிப்பதிவு : சுதாகர்