முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்













முருக பெருமான் சூரபத்மனை அழித்து உலகுக்கு அருள் புரிந்த நாள் கந்தசஷ்டி திருநாளாகும். சூரனை அழித்த நிகழ்ச்சியை நினைவூட்ட சூரசம்ஹாரம் அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று நடைபெறுகிறது.

சூரன் தான் பெற்ற வரத்தால் நன் மக்களுக்கும், தேவர்களுக்கும் துன்பங்கள் பல செய்தான். அவன் நீண்ட காலம் இவ்வுலகில் வாழ்ந்தால் ஆயிரக்கணக்கான பாவ செயல்களை செய்து, நரகத்திற்கு ஆளாவான். தவத்தால் வரம் பல பெற்ற இவன், பெரும்பாவி ஆகி விடக்கூடாது என்ற கருணையால் நினைந்து இறைவன் குமாரனாக தோன்றி வேலாயுதத்தால் அவனுடைய உடலை இரு துண்டுகளாக்கினார்.

அதில் ஒன்றினை மயில் வாகனமாகவும், மற்றொன்றினைச் சேவல் கொடியாகவும், தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

இதனை விளக்கவே சூரசம்ஹாரம் முடிந்த உடன் முருகனை மயில்வாகனத்தில் ஏற்றுகின்றனர். அப்போது அவனுக்கு சேவல்கொடியாகிறது.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புராணங்களின்படி முருகன் தன் படைகளுடன் திருச்செந்தூர் வந்து தங்கியதாகவும், அங்கு விஸ்வகர்மாவால் அமைக்கப்பட்ட தேவகுருவாகிய குரு என்ற வியாழபகவானால் பூஜிக்கப்பட்டு அசுரர்களின் வரலாறு பற்றி அறிந்ததாகவும் கூறப்படுகிறது.

வியாழபகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் திருச்செந்தூர் சிறப்பு பெற்ற குரு தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கிருந்து குமரபெருமான் வீரபாகு தேவரை சூரபத்மனுக்கு அறிவுரை கூறும்படி தூது அனுப்பினார்.

வீரபாகு தேவரின் தூது பயனற்று போகவே முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரனை வெற்றிக்கொண்டார். இந்நகர் வெற்றி மாநகர் என பொருள்படும்படி ஆரம்பத்தில் வடமொழியில் ஜெயந்திபுரம் என அழைக்கப்பட்டு பின்னர் சயந்தி, செந்தில், திருச்செந்தூர் என்றெல்லாம் தமிழில் பெயர்கள் பெற்றுள்ளது.

மாமரமாக நின்ற சூரபத்மன் பிளவுபட்ட இடம் திருச்செந்தூரில் இருந்து 6 மைல் தூரத்தில் கடல் கரையோரமாக உள்ள மாப்பாடு என்ற தலம், தற்போது மணப்பாடு என்றும் அழைக்கப்படுகிறது.

திருச்செந்தூர் கோவிலில் மூலவருக்கு பின்னால் முருகப்பெருமானால் பூஜிக்கப்பட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளன. கோவிலின் தெற்கே கடற்கரை ஓரமாக சிறிது தூரத்தில் கந்தபுஸ்கரணி அமைந்துள்ளது. இத்தீர்த்தம் நாளி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இப்புனித கிணற்று நீர் இனிமையாக இருப்பதுடன் நோய்களை தீர்க்கும் குணம் படைத்ததாகவும் இருக்கிறது. கந்தசஷ்டி திருநாளில் என்னவரம் கேட்டாலும் அந்த வரம் தந்திடுவான் முருகன்என்று கூறப்படுகிறது. திதிகளில் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருகிறது. செல்வத்தை தரும் சுக்கிரனின் எண் 6, சுக்கிரனின் அதிதேவதை மகாலெட்சுமி.

மற்ற நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட 6-வது திதியான சஷ்டியில் விரதம் இருப்பதன் மூலம் மகாலெட்சுமியின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம்.


No comments:

Post a Comment