வச்சிக்கவா சினிமா விமர்சனம்




















நாயகன் மாணிக்கவேலும் நாயகி அச்சிதாவும் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். அச்சிதாவிற்கு மாணிக்கவேல் முறைப்பையன். இருவரும் சிறுவயதில் இருந்தே ஸ்கூலுக்கு ஒன்றாக சென்று வருகிறார்கள். அச்சிதாவை ஒரு தலையாக காதல் செய்கிறார் மாணிக்கவேல். ஆனால், அச்சிதாவிற்கு இந்த விசயம் தெரியாமல் மாணிக்கவேலுடன் முறைப்பையன் என்பதால் சாதாரணமாக பழகி வருகிறார்.

மாணிக்கவேலுக்கு அச்சிதா மீதுள்ள காதல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தன் காதலை சொல்ல பல வழிகளில் முயற்சி செய்கிறார். இந்நிலையில் பக்கத்து ஊரில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு செல்கிறார் அச்சிதா. அந்த ஊரில் உள்ள பள்ளியில் சிறுவர்கள் அடிக்கடி காணாமல் போகிறார்கள். இது தெய்வ குற்றம் என்று சொல்லி ஊரில் உள்ள மக்களை ஏமாற்றிக் கொண்டு அவர்களுக்கு தெரியாமல் சிறுவர்களை பலி கொடுத்து வருகிறார் சாமியாரான ராஜ அம்மையப்பன்.

அப்படி ஒருநாள் அச்சிதா செல்லும் வழியில் சாமியார் ஒரு சிறுவனுக்கு சாக்லெட் கொடுத்து அவனை மயங்க வைத்து கடத்தி செல்வதை பார்த்து விடுகிறார். அதை தன் அக்காவின் கணவரான ரபியிடம் சொல்கிறார். அவர் அந்த சாமியார் மீது போலீசிடம் தகவல் கொடுக்க, போலீசார் சாமியாரை கைது செய்து விடுகிறார்கள். குற்றம் நிரூபிக்கப்படாததால் ஜெயிலில் இருந்து வெளியில் வரும் சாமியார் அச்சிதாவை பழி வாங்க நினைக்கிறார்.
இதற்கிடையில் தன் அக்காவும் அவரின் கணவரும் சந்தோஷமாக இருப்பதை பார்க்கிறாள் அச்சிதா. அதலிருத்து தன் மாமா மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அவரை அடைய முயற்சி செய்கிறாள்.

இறுதியில் அச்சிதா, தன்னை உயிருக்கு உயிராக காதலிக்கும் மாணிக்கவேலுடன் சேர்ந்தாரா? தன் அக்காவின் கணவரை அடைந்தாளா? சாமியாரின் பழிக்கு ஆளானாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகன் மாணிக்கவேல், நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவர் செய்யும் செய்கைகள் செயற்கைத்தனமாக தோன்றுகிறது. அச்சிதாவிடம் தன் காதலை சொல்ல முயற்சி செய்யும் காட்சிகளும், அவளுக்காக ஏங்கும் காட்சிகளிலும் நடிப்பு திறனை காட்ட முயற்சி செய்திருக்கிறார்.

நாயகி அச்சிதா சிறப்பாக நடித்திருக்கிறார். ஓரிரு இடத்தில் இவரின் முகபாவனைகளை ரசிக்கலாம். முதல் படத்திலேயே நடிப்பதற்கான நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சாமியாராக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளரான ராஜ அம்மையப்பன் பார்வையிலேயே மிரட்டுகிறார். இவருக்கு குறைந்த காட்சிகளே அமைத்து ஒரே வசனத்தையே படம் முழுக்க கூற வைத்திருக்கிறார் இயக்குனர்.

நரபலி கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் ரபி, அதில் நரபலி சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் காதல் காட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். படத்தின் நீளத்திற்காக முதற்பாதியில் தேவையற்ற காட்சிகளை திணித்தது போல் இருக்கிறது. மேலும், காமெடி என்னும் பெயரில் மைனர் மற்றும் குடிகாரனாக வருபவர் செய்யும் செய்கைகள் ரசிக்க முடியவில்லை. முதற்பாதியில் வரும் காதல் காட்சிகள் மற்றப் படங்களை ஞாபகப்படுத்துகிறது.

ரித்தேஷ் இசையில் ஒரு பாடலை ரசிக்கலாம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். ரபியின் ஒளிப்பதிவு ஓரிரு இடத்தில் ரசிக்க வைக்கிறது. ஆனால் பெரும்பகுதி இருட்டாகவே காட்சியளிக்கிறது.

No comments:

Post a Comment