T.N.P.S.C : மார்ச் 24 முதல் குரூப் 4 கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடங்களை ஒதுக்குவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் எம்.விஜயகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இளநிலை உதவியாளர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகள், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி நான்கின் கீழ் வருகின்றன. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, மார்ச் 24- ஆம் தேதி தொடங்கி, மே 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான விவரங்கள் அனைத்தும் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது மூலச் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிட்ட நகல்களின் சான்றிதழ்கள் அனைத்தையும் கலந்தாய்வுக்கு வரும்போது தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும், கம்ப்யூட்டர் வழி விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு தமிழ் வழி மூலம் படித்ததற்கான சான்றினை பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியையிடம் இருந்து பெற்று வர வேண்டும். கலந்தாய்வின்போது இந்தச் சான்றிதழ் அவசியம்.

சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள், சரிபார்ப்புக்குப் பிறகு தகுதி பெறும் பட்சத்தில், அதைத் தொடர்ந்து நடைபெறும் கலந்தாய்வுக்கு தரவரிசைப்படி அனுமதிக்கப்பட்டு இடஒதுக்கீட்டு முறையில் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் துறைகள் ஒதுக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்பாடு: விண்ணப்பதாரர்கள் தவிர அவர்களுடன் வரும் பிற நபர்கள் யாரும் தேர்வாணையச் செயலாளர் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், குழந்தையுடன் வரும் பெண் விண்ணப்பதாரர்களுடன் ஒரு நபரும், மாற்றுத் திறனாளிகள் என்றால் அவர்களுடன் ஒரு நபரும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தேர்வாணையச் செயலாளர் எம்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Top of Form