விண்டோஸ் சிஸ்டம் அடிக்கடி ரீபூட் ஆகிறதா?












விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் 
கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. ஏன்? இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப்படுகிறது? ரீ பூட் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? எதனை நாம் இழக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம்.

பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில் இருக்கையில், அதன் சிஸ்டம் பைல்களை மாற்றி அமைக்க முடியாது. அந்த பைல்கள் எல்லாம், செயல்பாட்டில் வளைக்கப்பட்டிருக்கும். அவை விடுவிக்கப்படாத நிலையில், அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள இயலாது.


ரீபூட் என்ன செய்கிறது? விண்டோஸ் இயக்கம் செயல்பாட்டில் உள்ள பைல்களை அப்டேட் செய்திடவோ அல்லது நீக்கவோ முடியாது. விண்டோஸ் அப்டேட் செயல்பாடு, புதிய அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்திடுகையில், நேரடியாக, விண்டோஸ் இயக்கத்தில் அதனைச் செயல்படுத்த இயலாது. இயக்கத்தில் இருக்கும் சிஸ்டம் பைல்களில் எந்த மாற்றத்தினையும் மேற்கொள்ள இயலாது. எனவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நிறுத்தி மீண்டும் இயக்கினால் தான், அவை தானாக மாற்றிக் கொள்ள வழி கிடைக்கும். ரீபூட் இதனைத்தான் செய்கிறது.


சில வேளைகளில், பைல்களை நீக்கும் போதும் ரீபூட் தேவைப்படுகிறது. சில வகையான சாப்ட்வேர் தொகுப்புகளை அப்டேட் செய்திடுகையில் அல்லது நீக்குகையில், ரீபூட் அவசியத் தேவையாகிறது. எடுத்துக் காட்டாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை அல்லது ஹார்ட்வேர் ட்ரைவர் பைல்களை இயக்குகையில், அவற்றின் பைல்கள் மெமரியில் ஏற்றப்படுகின்றன. 


இத்தகைய பைல்களில் அப்டேட் செய்திடுதல் அல்லது நீக்குதல் செயல்பாடு மேற்கொள்ளப்படுகையில், விண்டோஸ் கம்ப்யூட்டரை ரீபூட் செய்திட வேண்டுகிறது. சிஸ்டம் முழுமையாக இயங்கும் முன்னர், இந்த பைல்கள் மாற்றப்பட்டு செயல்பாட்டிற்கு வருகின்றன. 


விண்டோஸ் அப்டேட் ரீபூட்: மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிடுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை இவை வெளியாகின்றன. மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் இவை கிடைக்கின்றன. அவை தளத்தில் ஏற்றப்பட்டவுடன், நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பு பெறுகையில், தாமாகவே அவை கம்ப்யூட்டரில் இறங்குகின்றன. பின் நாம் செட் செய்தபடி, அவை பதியப்படுகின்றன. அவை பதிவு செய்யப்பட்டவுடன், சிஸ்டம் பைல்கள் அப்டேட் செய்திட நம் கம்ப்யூட்டரை ரீபூட் செய்தால் தான், புதிய பேட்ச் பைல்களின் செயல்பாட்டினால், சிஸ்டம் பைல்கள் மேம்படுத்தப்படும். 


விண்டோஸ் இயக்கம் இந்த பேட்ச் பைல்கள் கிடைத்தவுடன், உங்களைக் கட்டாயமாக ரீபூட் செய்திடக் கேட்டுக் கொள்ளும். ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான், இந்த பேட்ச் பைல்கள் தரப்படுகின்றன. எனவே, எவ்வளவு சீக்கிரம் ரீபூட் செய்து, இவற்றை அப்டேட் செய்கிறோமோ, அந்த அளவிற்கு நம் கம்ப்யூட்டர் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. முன்பு எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பாதிக்கும் வகையில் Blaster, Sasser, மற்றும் Mydoom ஆகிய வைரஸ்கள் பரவிய போது, மைக்ரோசாப்ட் பேட்ச் பைல்களைத் தந்து, கம்ப்யூட்டரின் பயனாளரின் அனுமதியைப் பெறாமலேயே கம்ப்யூட்டரை ரீபூட் செய்தது. ஏனென்றால், அந்த வைரஸ்களின் தாக்கம் அந்த அளவிற்கு மோசமாக இருந்தது. பயனாளர்கள் காத்திருந்து, சில நாட்கள் கழித்து பூட் செய்து, அவற்றை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தால், பேட்ச் பைல்களின் செயல்பாடு நமக்குக் கிடைக்காமலேயே போய்விடும். 


சாப்ட்வேர் பதிவதும் நீக்குவதும் மற்றும் மேம்படுத்தலும்: சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்தாலோ, கம்ப்யூட்டரிலிருந்து அன் இன்ஸ்டால் செய்தாலோ, அல்லது அவற்றை உயரிய பதிப்பிற்கு மேம்படுத்தினாலோ, அவை உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்கின்றன. அல்லது செய்திடுமாறு கேட்டுக் கொள்கின்றன. ஏனென்றால், இந்த அப்ளிகேஷனுக்கான பைல்களை கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இருக்கும்போதே மாற்ற இயலாது. எடுத்துக் காட்டாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினைக் கம்ப்யூட்டரில் இருந்து நீக்கினால், அதனைச் சார்ந்த அனைத்து பைல்களும் நீக்கப்பட மாட்டாது. கம்ப்யூட்டரை ரீபூட் செய்தால் தான், அனைத்து பைல்களும் நீக்கப்பட்டு, முற்றிலுமாக அப்ளிகேஷன் அழிக்கப்படும்.


ரீபூட் செய்கையில் பைல்கள் எப்படி நகர்த்தப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன?: பயன்பாட்டில் இருக்கின்ற பைல் ஒன்றை நகர்த்த, வேறு பெயரில் அமைக்க அல்லது அழிக்க, விண்டோஸ் சிஸ்டம் அப்ளிகேஷன் ஒன்றை அப்ளிகேஷன் டெவலப்பர்களுக்குத் தருகிறது. இது இந்த செயல்பாட்டிற்கான வேண்டுகோளினை HKLM\System\CurrentControlSet\Control\Session Manager\PendingFileRenameOperations என்ற இடத்தில் ரெஜிஸ்ட்ரியில் எழுதி வைக்கிறது. 


விண்டோஸ் பூட் செய்கையில், அது ரெஜிஸ்ட்ரியைச் சோதனை செய்து, பைல் செயல்பாட்டிற்கான நடைமுறைத் தேவைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது. இந்த நிலையில் தான், சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை அன் இன்ஸ்டால் செய்கையில், நம்மால் அழிக்க இயலாத பைல்கள் அழிக்கப்படுகின்றன.


மைக்ரோசாப்ட் இந்த ரீபூட் விஷயத்தை, காலப்போக்கில் குறைத்துக் கொண்டே வந்துள்ளது. ரீபூட் செய்வதனை அத்தியாவசியத் தேவையாக அது காட்டுவதில்லை. விண்டோஸ் ட்ரைவர் புரோகிராம்களை, ஒன்றின் இடத்தில் இன்னொன்றை மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதி படைத்துள்ளதாக உள்ளது.இதனால் ரீபூட் தேவை இல்லாமல் போய்விடுகிறது. மேலும், புதிய பாதுகாப்பு அம்சங்கள், விண்டோஸ் இயக்கத்தினைக் கூடுதல் பாதுகாப்பு உள்ளதாக அமைத்துள்ளது. இதனால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், விண்டோஸ் பைல்கள் அப்டேட் செய்த பின்னரும், ரீபூட் செய்திட மூன்று நாட்கள் கால அவகாசம் தரப்படுகிறது.

No comments:

Post a Comment