கத்தி திரையிடப்படும் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு படம் திரைக்கு வருமா...?












சென்னையில் கத்தி திரையிடப்பட இருந்த தியேட்டர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கிய சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதனால் படம் திட்டமிட்ட நாளை வெளிவருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் கத்தி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை(அக்., 22ம் தேதி) தீபாவளி அன்று ரிலீஸாக இருக்கிறது. லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்ஷே உடன் மிகவும் நெருக்கமானவர் என்றும், அவரது பினாமியாக இப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்து இருப்பதாகவும் கூறி தமிழகத்தில் இப்படத்தை திரையிட விட மாட்டோம் என தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


பேச்சுவார்த்தையில் சுமூகம்
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு தரப்பினருடன், தமிழ் அமைப்புகள் சார்பில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு திட்டமிட்டபடி நாளை கத்தி படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது.


பெட்ரோல் குண்டு வீச்சு
பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த சிறிது நேரத்தில் சென்னையில் உள்ள தியேட்டர்களில் எல்லாம் புக்கிங் தொடங்கின. இந்நிலையில் சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் புக்கிங் நடந்து வந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று தியேட்டரை சரமாரியாக தாக்கினர், இதில் தி்யேட்டரின் கண்ணாடிகள் நொறுங்கின, தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கத்தி பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. மேலும் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் தியேட்டரின் முன்புறம் சேதம் அடைந்தது. இதேப்போல் சென்னை உட்லேண்ட் தி்யேட்டரிலும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


படம் வெளியாவதில் சிக்கல்.?
இத்தகைய தாக்குதல் சம்பவங்களால், சென்னையில் உள்ள தியேட்டர்களில் கத்தி படத்திற்கான டிக்கெட் புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கத்தி படம் வெளியாவதில் சிக்கல் அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள தியேட்டர் அதிபர்கள் எல்லோரும் சேர்ந்து படத்தை நாளை திரையிடலாமா வேண்டாமா என யோசித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment