2ஜி சர்ச்சை - விஜய் மீது வழக்கு












கத்தி படத்தில், 2ஜி ஊழல் தொடர்பாக நடிகர் விஜய் பேசிய டயலாக் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில், விஜய், சமந்தா நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியான படம் கத்தி. அனிருத் இசையமைத்திருந்தார், லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. லைகா நிறுவனத்தால் இப்படம் தீபாவளிக்கு முதல்நாள் வரை ரிலீஸாகுமா, ஆகாதா என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு கடைசியில் ஒருவழியாக சொன்னபடி தீபாவளி அன்று திரைக்கு வந்தது கத்தி படம். இப்படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு ஒன்றும் பாதிப்பில்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயமும், விவசாயிகள் படும் அவஸ்தையையும் சொல்லிய 'கத்தி'' படத்தில், 2ஜி ஊழல் உள்ளிட்ட ஊழல்கள் பற்றிய வசனக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த வக்கீல் ராமசுப்ரமணியம் என்பவர் கத்தி படம் தொடர்பாக விஜய், முருகதாஸ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், வக்கீல் ராமசுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, 2ஜி வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வரும் வேளையில், படத்தில் 2ஜி ஊழலை மையப்படுத்தி வசனங்கள் இடம்பெறுகின்றன, இது கோர்ட்டை அவமதிக்கும் செயல், எனவே ஐபிசி., 500 பிரிவின் கீழ் படத்தின் ஹீரோ விஜய், இயக்குநர் முருகதாஸ் மற்றும் லைகா நிறுவனம் மீது வழக்கு தொடரவேண்டும் என தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாரீஸ்வரி, விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


No comments:

Post a Comment