மேகா சினிமா விமர்சனம்


















நாயகன் அஸ்வின் படித்து முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் போட்டோ கிராபராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தந்தை போலீஸ் அதிகாரியான விஜயகுமாரிடம் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 

ஒருநாள் அஸ்வின் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும்போது எதேச்சையாக நாயகி சிருஷ்டியை பார்க்கிறான். அவளைப் பார்த்தவுடனேயே அவள் மீது காதலும் கொள்கிறான். அப்போது பெய்யும் மழையில் இருவரும் நெருக்கமாக நின்று ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். 


இந்நிலையில், சிருஷ்டியின் அண்ணன் திருமணத்துக்கு அஸ்வின் போட்டோ எடுக்க போகிறார். சிருஷ்டிக்கு 2 அண்ணன்கள். 2-வது அண்ணனுக்கு நடக்கும் கல்யாணத்திற்கு வந்திருக்கும் மூத்த அண்ணன், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டதால் அந்த குடும்பமே அவரை வெறுத்து ஒதுக்குகிறது. 


இதுதெரியாத அஸ்வின், அவர்கள் எல்லோரையும் ஒன்றாக நிற்க வைத்து போட்டோ எடுக்கிறார். இதனால், சிருஷ்டியின் குடும்பத்திற்கு மூத்த அண்ணன் மீதிருந்த கோபம் சற்று தணிகிறது. இதற்கு காரணமாக இருந்த அஸ்வின் மீதும் தனிஈர்ப்பு உருவாகிறது. 


இதை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு சிருஷ்டியிடம் சென்று காதலை சொல்கிறார் அஸ்வின். அவளும் அஸ்வினின் உண்மையான காதலை புரிந்துகொண்டு ஒத்துக்கொள்கிறார். இருவரும் காதல் ஜோடிகளாக உலா வருகின்றனர். 


ஒருநாள் இவர்களை சிருஷ்டியின் மூத்த அண்ணன் நேரில் பார்த்துவிடுகிறார். அப்போது, இவர்களை கண்டித்து செல்கிறார். இருந்தாலும், இருவரும் யாருக்கும் தெரியாமல் காதல் செய்து வருகிறார்கள். 


இந்நிலையில், விஜயகுமார் மூலமாக போலீசில் தடவியல் நிபுணர் பணி அஸ்வினுக்கு கிடைக்கிறது. வேலை கிடைத்த மாத்திரத்தில் விஜயகுமாருக்கு கமிஷனராகும் அறிவிப்பு வருகிறது. மறுநாள் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வருகிறது. 


ஊடகங்கள் தற்கொலை என்று சொல்லி வரும்வேளையில், தடவியல் நிபுணரான அஸ்வின் அது தற்கொலை இல்லை கொலைதான் என்று கண்டுபிடிக்கிறார். அதை நிரூபிப்பதற்காக அவரை கொலை செய்யப்பட்டதற்கான காரணங்களை கண்டுபிடிக்கிறார் அஸ்வின். 


இந்த தகவல்களையெல்லாம் திரட்டி உயரதிகாரியிடம் சமர்பிக்க ரெடியாக இருக்கும்போது சிருஷ்டியை மர்ம கும்பல் ஒன்று கடத்துகிறது. அஸ்வின் திரட்டி தகவல்களை எங்களிடம் ஒப்படைத்தால்தான் சிருஷ்டியை விடுவிப்போம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். 


இறுதியில் அஸ்வின் தான் திரட்டிய தகவல்களை அந்த கும்பலிடம் ஒப்படைத்து சிருஷ்டியை மீட்டாரா? அந்த மர்ம கும்பலுக்கும் அஸ்வின் திரட்டிய தகவல்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை விளக்கி கூறியிருக்கிறார்கள். 


நாயகன் அஸ்வினுக்கு இந்த படத்தில் முழுநீள கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். காதல் காட்சிகளாகட்டும், ஆக்ஷன் காட்சிகளாகட்டும் நடிப்பில் மிளிர்கிறார். 


நாயகி சிருஷ்டி திரையில் பார்க்க அழகாக இருக்கிறார். இவர் கன்னத்தில் விழும் குழியில் இளைஞர்கள் தடுக்கி விழுவது நிச்சயம். மேலும், போலீஸ் அதிகாரியாக வரும் விஜயகுமார், அஸ்வினுக்கு உயரதிகாரியாக வரும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


படத்தின் திருப்புமுனையாக வரும் ஆடுகளம்நரேனுக்கு இப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம். அதை திறம்பட செய்திருக்கிறார். 


இயக்குனர் கார்த்திக் ரிஷி படத்தில் ரசிக்கும்படியாக காட்சிகளை வைக்காதது படத்திற்கும் பெரும் பின்னடைவை கொடுத்திருக்கிறது. கதையை வேகமாக நகர்த்தக்கூடிய அளவுக்கு காட்சிகள் இல்லாதது மிகவும் போரடித்திருக்கிறது. 


இசைஞானி இளையராஜா இசைதான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. இவருடைய இசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படமாக்கப்பட்டிருக்கும் புத்தம் புது காலைபாடல் கேட்கவும், பார்க்கவும் குளுமை. 

No comments:

Post a Comment