தாவணிக் காற்று சினிமா விமர்சனம்

நாயகனின் தந்தையான முரளியும், ரவிக்குமார் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்து வருகிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு ரவிக்குமார், நாயகனுடைய குடும்பத்தை கொல்ல முயற்சி செய்கிறார். ஒருநாள் நாயகன் குடும்பத்தை சேர்ந்த எல்லோரும் சுற்றுலா செல்கின்றனர். 



அப்போது அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கிவிடுகிறது. இதில் நாயகனும், அவரது அம்மா மட்டும் தப்பித்துவிட, அப்பாவும், தங்கையும் இறந்து போகிறார். 
நடந்தது ஒரு விபத்து என்று இவர்கள் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், இது திட்டமிட்ட சதி என்பது ஆடிட்டர் மூலமாக நாயகனுக்கும், அவரது அம்மாவுக்கும் தெரிய வருகிறது. நாயகன் சிறுவயதில் இருப்பதால் ரவிக்குமாரை எதிர்க்க முடியவில்லை. இருந்தாலும் அவரை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியுடன் வளர்ந்து பெரியவனாகிறான். 
பெரியவனான நாயகனிடம் அவரது அம்மா, சீக்கிரமாக ரவிக்குமாரை பழிதீர்க்குமாறு அவனிடம் கட்டளையிடுகிறார். நாயகனும் தக்க நேரம் பார்த்து காத்திருக்கிறான். இந்நிலையில், நாயகனுக்கு சொந்தமான ஸ்டுடியோவிற்கு ஒருநாள் நாயகி வருகிறாள். நாயகியை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார் நாயகன். தன் குடும்பம் அழிவதற்கு காரணமாக இருந்த ரவிக்குமாரின் மகள்தான் நாயகி என்பதை நாயகன் அறிகிறார்.
முடிவில், நாயகியை காதலித்து திருமணம் செய்து கொண்டாரா? இல்லை தன் குடும்பத்தை அழித்த நாயகியின் குடும்பத்தை பழிவாங்கினாரா? என்பதே சஸ்பென்ஸ், திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள். 
நாயகன் தமிழ் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக் கதையையும் இவரே தாங்கி நிற்கிறார். அந்த வலுவான கதாபாத்திரத்தை திறமையுடன் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். 
நாயகி ஆராத்யா பார்க்க அழகாக இருக்கிறார். இவரது கண்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்டது. காதல், அழுகை என எல்லாவற்றிலும் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார். பாடல் காட்சிகளிலும் இவரது திறமை பளிச்சிடுகிறது.
இரண்டு குடும்பங்களுக்குள் ஏற்படும் சம்பவத்தை மையப்படுத்தி 2 மணி நேர சினிமாவாக எடுத்திருக்கிறார் இயக்குனர் வி.ஆர்.பி.மனோகர். இயல்பான கதையை எதார்த்தமான காட்சிகளில் பளிச்சிட செய்திருக்கிறார். முதல் பாதியில் எதார்த்தமாக செல்லும் கதையோட்டம், பிற்பாதியில் திரில்லராக மாறுகிறது. குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு தொய்வில்லாமல் கதையை நகர்த்தி செல்வது சிறப்பு. 
உதயன் இசையில் அமைந்துள்ள 2 பாடல்களும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் மெனக்கெட்டிருக்கிறார். முத்ரா ஒளிப்பதிவில் குற்றாலத்தில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் அருமை. பாடல்கள் காட்சிகளில் இவரது கேமரா கண்கள் பளிச்சிடுகிறது. 
நடிகர் : தமிழ்
நடிகை : ஆராத்யா
இயக்குனர் : வி.ஆர்.பி.மனோகர்
இசை : உதயன்
ஓளிப்பதிவு : முத்ரா