தாய், தந்தையை இழந்து ஒரு குப்பத்தில் சாதாரண வீட்டில் வாழ்ந்து வருகிறார்
நாயகன் ராமகிருஷ்ணன். இவர் வேலை ஏதும் செய்யாமல் சென்ராயனுடன் சேர்ந்து சிறுசிறு
திருட்டு தொழிலை செய்து வருகிறார்.
ஒருநாள் நாயகி ஆத்மியாவும், தோழி காருண்யாவும் ரோட்டில் நடந்து செல்லும் போது சென்ராயன்
ஆத்மியாவின் பையை பிடுங்கிச் செல்கிறான். இதை வாங்கித் தருவதுபோல் நடித்து
ராமகிருஷ்ணனும் சென்ராயனை விரட்டுகிறார். இவர்களை பின் தொடர்ந்து செல்லும் ஆத்மியா
மற்றும் காருண்யா, இருவரும் கூட்டாளிகள் என்று
தெரிந்துக் கொள்கிறார்கள்.
ராமகிருஷ்ணன் மீது கோபம்
கொள்ளாமல் ஆத்மியா காதல் வயப்படுகிறார். தன் காதலை ராமகிருஷ்ணனிடம் சொல்ல முயற்சி
செய்கிறார். ஆனால் ராமகிருஷ்ணன் காதலை ஏற்காமல் அலட்சியம் காட்டி வருகிறார். ஒரு
கட்டத்தில் ஆத்மியாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார் ராமகிருஷ்ணன்.
இவருடைய காதலை ராமகிருஷ்ணன்
ஏற்றப்பின் அவரை அவமானப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறார் ஆத்மியா. இதைக்கண்டு கோபம்
அடையும் காருண்யா, ஏன் இப்படி செய்கிறாய் என்று
கேட்கிறார்.
அதற்கு ஆத்மியா, நான் முன்பு ஒருவரை காதலித்து வந்தேன். வீட்டிற்கு தெரியாமல்
திருமணம் செய்ய முடிவு எடுத்த நிலையில், என் வீட்டிற்கு திருட வந்த
ராமகிருஷ்ணன் நாங்கள் காதலிப்பதை வீட்டிற்கு தெரியும்படி செய்துவிட்டான். இதனால்
என் வாழ்க்கை வீணாய் போனது. அவனைப் பழிவாங்கத்தான் தேடிச் சென்று காதலித்தேன்
என்று கூறுகிறார்.
இதைக் கேட்டு காருண்யா
அதிர்ச்சியடைகிறார். இந்த விஷயம் ராமகிருஷ்ணனுக்கு தெரிந்து விடுகிறது. இதை அறிந்த
ராமகிருஷ்ணன், ஆத்மியாவிடம் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
குப்பத்து இளைஞனாக
நடித்திருக்கும் ராமகிருஷ்ணனின் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் சலிப்பை
ஏற்படுத்துகிறது. இவர் பாடியிருக்கும் ‘ஒரு பொண்ணு என்ன சுத்தி’ என்ற பாடல் தாளம் போட வைக்கிறது. சிறப்பாக நடனமும் ஆடியிருக்கிறார்.
படத்தில் ஆத்மியாவிற்கு
பொருந்தாத கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராமகிருஷ்ணன். வில்லத்தனம்
கலந்த இவருடைய நடிப்பு ரசிக்கும்படியாக இல்லை. மற்றொரு நாயகியாக வரும் காருண்யா, கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்திருக்கிறார். சிறந்த கதாபாத்திரத்தை
தேர்வு செய்தால் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கலாம்.
போலீஸ் அதிகாரியாக வரும்
ஜெயபிரகாசுக்கு, அவர் திறமைக்கு ஏற்ற
கதாபாத்திரம் அமையவில்லை. இமான் அண்ணாச்சி, சென்ராயன் ஆகியோர் கொடுத்த
வேலையை செய்திருக்கிறார்கள். கண்ணன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
பன்னீர் செல்வம் ஒளிப்பதிவை ரசிக்கலாம்.
நல்ல கதையை எடுத்துக் கொண்ட
இயக்குனர் ராமகிருஷ்ணன், திரைக்கதையை திறமையாக
கையாளவில்லை. நல்ல திறமை கொண்ட இவர் நாயகனாக, நல்ல கதையம்சம் உள்ள படத்தில்
நடித்தால் சிறப்பான எதிர்காலம் அமையும்.
நடிகர் : ராமகிருஷ்ணன்
நடிகை : ஆத்மியா
இயக்குனர் : ராமகிருஷ்ணன்
இசை : கண்ணன்
ஓளிப்பதிவு : எம்.வி.பன்னீர்செல்வம்