ஆராய்ச்சியாளரான கிரேஸ்ட்ரோக் உலகத்திலேயே அதிக சக்திவாய்ந்த
எரி நட்சத்திரத்தை தேடி தனது மகன் மற்றும் மனைவியுடன் ஒரு மலைக்கு பயணமாகிறார்.
அங்கு எரி நட்சத்திரத்தை கண்டறியும் கிரேஸ்ட்ரோக் அதன் ஒரு பகுதியை உடைக்க இயற்கை
அவருக்கு எதிராக திரும்புகிறது.
அந்த எரிமலை வெடித்து சிதற, அங்கிருந்து தப்பித்து
ஹெலிகாப்டரில் ஏறி பயணமாகும்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிறது.
இந்த
விபத்தில் கிரேஸ்ட்ரோக் மற்றும் அவரது மனைவி இறந்துபோக, அவரது மகன் மட்டும் உயிர்
பிழைக்கிறான். நடுக்காட்டுக்குள் தவிக்கும் அவனை கர்லா என்ற மனிதக் குரங்கு
எடுத்து வளர்க்கிறது. குரங்குகளுடனும் காட்டில் உள்ள மற்ற விலங்குகளுடனும்
நெருங்கி பழகும் அவன், காட்டில்
ஒவ்வொரு நுட்பங்களையும் அறிந்து கொண்டு வளர்ந்து இளைஞனாகிறான்.
அதிக
சக்தி வாய்ந்தவனாக வளரும் அவன் அந்த காட்டுக்கே ராஜாவாக, டார்ஜானாக உருவெடுக்கிறான்.
ஒருநாள் இவன் வசிக்கும் காட்டுக்கு நாயகியான ஜெயின் தனது அப்பா மற்றும்
நண்பர்களுடன் அந்த காட்டை சுற்றிப் பார்க்க வருகிறாள். வந்த இடத்தில் ஒரு ராட்சத
பறவையிடம் சிக்கும் ஜெயினை காப்பாற்றுகிறான் டார்ஜான். அவளை யாருக்கும் தெரியாத
இடத்தில் வைத்து சிகிச்சை கொடுக்கிறான்.
இதில்
குணமாகும் ஜெயினுக்கு டார்ஜான் மீது இனம்புரியாத ஈர்ப்பு வருகிறது. டார்ஜானுக்கும்
ஜெயின் மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது. குணமாகியவுடன் காட்டில் உள்ள தனது
இருப்பிடம் திரும்பும் ஜெயின் பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு பயணமாகிறாள்.
டார்ஜன் அவள் எப்போது திரும்ப வருவாள் என ஏங்கிக் கிடக்கிறான்.
இந்நிலையில், ஒருநாள் ஆராய்ச்சியாளர்
கிரேஸ்ட்ரோக் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை பார்க்கும்
டார்ஜானுக்கு அங்கு இருக்கும் சில போட்டோக்களை பார்த்த பிறகு தான் யார் என்பதை
அறிந்துகொள்கிறான்.
இதற்கிடையில்
கிரேஸ்ட்ரோக் பணிபுரிந்த ஆராய்ச்சி கூடத்தில் பணிபுரியும் மற்றொரு ஆராய்ச்சியாளரான
கிளெண்டன், கிரேஸ்ட்ரோக்
தேடிச் சென்ற எரி நட்சத்திரத்தை தான் தேடிக் கண்டுபிடிக்க முடிவெடுக்கிறார்.
அதற்கு ஜெயினின் உதவியை நாடுகிறான். ஜெயினுக்கு உதவி செய்வதாக கூறி டார்ஜான்
வாழும் காட்டுக்கு அழைத்துச் செல்லச் சொல்கிறான்.
அவளும்
அதை நம்பி கிளெண்டனை அங்கு அழைத்து செல்கிறாள். ஆனால், அங்கு சென்ற பிறகுதான்
தெரிகிறது அவன் அந்த எரி நட்சத்திரத்தை தேடித்தான் அங்கு வந்தான் என்று. இதற்கு
ஜெயின் எதிர்ப்பு தெரிவிக்கிறாள். எரி நட்சத்திரத்தை காட்டவில்லையென்றால் அவர்களை
கொன்றுவிடுவேன் என்று கிளெண்டன் மிரட்டுகிறான்.
இவர்களின்
பிடியில் இருந்து ஜெயினை டார்ஜான் காப்பாற்றினானா? அந்த எரி நட்சத்திரத்தை வில்லன்
கண்டுபிடித்தானா? என்பதே
மீதிக்கதை.
இது ஒரு
அனிமேஷன் படம் என்பதால் படத்தின் கதாபாத்திரத்திற்கு பெரிய விளக்கம் கொடுக்க
தேவையில்லை என்றாலும் அனிமேஷன் காட்சிகள் அனைத்தையும் தத்ரூபமாகவும், நேர்த்தியாகவும்
எடுத்திருக்கிறார்கள். டார்ஜான் ஒவ்வொரு கிளையாக தாவிச் செல்லும் காட்சிகள்
பிரம்மாண்டம். நீர்வீழ்ச்சியில் முதலையுடன் சண்டை போடும் காட்சி மயிர்கூச்செரிய
செய்கிறது.
படத்தில்
காட்டப்படும் காடு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. டார்ஜான் சிறு வயதிலேயே
காட்டுக்குள் தனிமையில் விடப்படுவதால், அவனால் பேசமுடியாது என்பதற்காக
முற்பாதியில் டார்ஜான் வரும் காட்சிகள் எல்லாமே நிசப்தமாகவே வருவது கொஞ்சம்
போரடிக்க வைக்கிறது.