பேமிலி பிளானிங் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்

போதிய குழந்தைகளை பெற்றெடுத்த பின் கர்ப்பமாவதை தடுக்க பெண்கள் பல வழிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஆண்களும் கூட சில நேரம் கருத்தடையில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் அதிகமாக ஈடுபடுவது பெண்களே. அப்படி ஈடுபடும் வழிகள் தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.

அப்படி நிரந்தமாக செய்யக்கூடிய வழிகளில் ஒன்று தான் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை எனப்படும் ட்யூபெக்டோமி. ட்யூபெக்டோமி என்பது கரு உண்டாவதை தடுக்கும் ஒரு நிரந்தர வழியாகும். இந்த முறையில் கருமுட்டைச் செல்லும் குழாய் அடைக்கப்படும். அதனால் கருப்பைக்கு கருமுட்டைகள் செல்வது தடுக்கப்படும்.
குழந்தை பிறப்பை தடுக்க இந்த வழிமுறையை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அதன் பக்க விளைவுகளைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் ரீதியாக பக்க விளைவுகளை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகவும். இப்போது இந்த முறையால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம்..
அறுவை சிகிச்சை செய்து கொள்பவர் அலர்ஜிகளுக்கு எந்தளவு தாக்கம் உள்ளவராக இருக்கிறாரோ, அந்தளவு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள கொடுக்கப்படும் மயக்க மருந்தினால் பக்க விளைவுகள் இருக்கும். அதனால் அது ஒவ்வொரு பெண்ணை பொறுத்து மாறுபடும்.
இரத்தக் கசிவு என்பது இந்த அறுவை சிகிச்சையினால் ஏற்படும் மற்றொரு முக்கியமான சிக்கலாகும். அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக ஏற்படும் துளைகளினால் இரத்தக் கசிவு ஏற்படும். ஆகவே அறுவை சிகிச்சை முடிந்த பின் கொடுக்கப்படும் கவனமும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இது அவர்களை வேகமாக குணமடையச் செய்யும். அதனால் இரத்தக் கசிவு போன்ற சிக்கல்களை தவிர்க்கலாம். இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது அறுவை சிகிச்சையின் போது அவர்களுக்கு கொடுக்கப்படும் மயக்க மருந்துகளே.
எனவே ஏற்கனவே அலர்ஜி ஏற்படும் என்றால், அதனை அறுவை சிகிச்சைக்கு முன்பாகவே மருத்துவரிடம் சொல்லி விடுவது நல்லது. குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையின் போது முக்கியமான மற்றொரு பக்க விளைவாக விளங்குகிறது தொற்றுகள்.
அறுவை சிகிச்சைக்கு பின், உங்களுக்கு காய்ச்சல் அல்லது வயிற்று வலி ஏற்பட்டால், அதனை உடனடியாக மருத்துவரிடம் கூறிவிடுங்கள். பிரச்சனை என்னவென்று விரைவாக கண்டுபிடித்தால் தான் விரைவாக குணமடைய முடியும்.
அறுவை சிகிச்சைக்கும், வயிற்று வலிக்கும் நேரடியான தொடர்பு இல்லை. ஆனால் அறுவை சிகிச்சையினால் உண்டாகும் தொற்றுகளால், இந்த வயிற்று வலி உண்டாகலாம். பொதுவாக வயிற்றின் கீழ் பகுதியில் தான் வலி உண்டாகும்.