ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் பேட்டி

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரீதிவ்யா. ஆந்திர தேசத்து நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கி, 2006ல் பாரதி என்ற படத்துக்காக நந்தி விருது வாங்கியிருக்கிறார். 









அதோடு, விரைவில் சிறந்த நடிகைக்கான விருதினையும் பெறுவேன் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி
* சினிமாவில் உங்களது பாலிஸி என்ன?
சினிமாவைப்பொறுத்தவரை எதையும் நாமாக தீர்மானித்து விட முடியாது. சினிமாதான் நம்மை தீர்மானிக்கும். நடித்த படங்களின் வெற்றியைப்பொறுத்து பாதை மாறும். அந்த வகையில், நான் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர், 6 படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டுத்தான் தமிழுக்கு வந்தேன். அதனால் என்னிடம் நிதானம் உண்டு. குறைவான படங்களென்றாலும் நல்ல கதைகளை மட்டுமே ஓ.கே செய்து வருகிறேன். மேலும், கதைக்காக என்னை முழுசாக மாற்றிக்கொள்வேன். அதேசமயம், படுகவர்ச்சியாக நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்ள மாட்டேன். அந்தவகையில், சக நடிகைகளுடன் நடிப்புப்போட்டியில் குதிப்பேன். ஆனால் கவர்ச்சிப்போட்டியில் ஒருபோதும் இறங்க மாட்டேன்.
* வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டடித்தபோதும் உங்கள் பெயரளவில் பெரிய பரபரப்பு இல்லையே?
அந்த படம் வந்த நேரத்தில் பேசப்பட்டேன். அதனால்தான் அதர்வா, ஜி.வி.பிரகாஷ்குமார், விஷ்ணு போன்ற நடிகர்களுடன் உடனடியாக நடிக்க கமிட்டானேன். அதோடு, சிவகார்த்திகேயன் நடிக்கும் டாணா படத்திலும் நடிக்கிறேன். அதனால் இந்த படங்கள் ஒவ்வொன்றாக திரைக்கு வரும்போது இன்னும் பேசப்படும் நடிகையாகி விடுவேன்.
* லட்சுமிமேனன் போன்ற குடும்ப நடிகைகளே உதட்டு முத்தக்காட்சிக்கு மாறி வருகிறார்களே. நீங்கள் எப்படி?
முத்தக்காட்சியில் நடிப்பதை கதையும், காட்சிகளும்தான் தீர்மானிக்கும். அதில் நடிப்பது அவரவர் விருப்பங்களைப்பொறுத்தது. ஆனால், என்னைக்கேட்டால, உதட்டு முத்தக்காட்சிகளில் நடிப்பது பற்றி இப்போதுவரை எந்த ஐடியாவும் இல்லை. ஒருவேளை டைரக்டர்கள் இந்த கதைக்கு கண்டிப்பாக முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் வற்புறுத்தினால் அதன்பிறகு அதைப்பற்றி யோசிப்பேன்.
* ஈட்டி படத்தில் உங்களுக்கும், அதர்வாவுக்குமிடையே கெமிஸ்ட்ரி எப்படி?
அதர்வா ரொம்ப நல்ல நடிகர். படத்தில் நடிக்கும்போது மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் இயல்பாக பழகுவார். அவருடன் நடிக்கச்சென்ற முதல் நாளிலேயே இரண்டு பேருமே நல்ல நட்பாகி விட்டோம். அதனால் அவருடன் நடிப்பது எளிதாக இருந்தது. அந்த படத்தில் நான் கல்லூரி பெண்ணாக நடித்துள்ளேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தவள் இந்த படத்தில் சிட்டிப்பெண்ணாக நடிக்கிறேன். அதனால் மாடர்ன் டிரஸ் அணிந்திருக்கிறேன். ஆனாலும், அதில் கிளாமர் இருக்காது. ரொம்ப டீசன்டாக வருகிறேன். இந்த படத்தில் காதல் காட்சிகளைப்பொறுத்தவரை நானும், அதர்வாவும் சூப்பராக நடித்திருப்பதாக டோட்டல் யூனிட்டே புகழாரம் சூட்டி வருகின்றனர். அதனால்,. எனக்கும், அதர்வாவுக்குமிடையே நல்லதொரு கெமிஸ்ட்ரி உருவாகியிருப்பதாக அறிகிறேன்.
* பென்சில் படத்துக்காக உடல் எடையை குறைத்தீர்களாமே?
அதெல்லாம் இல்லை. ஜி.வி.பிரகாஷ்குமார் அந்த படத்துக்காக எடையை குறைத்ததால், நானும் குறைத்தது போன்று செய்திகள் பரவி விட்டது. ஆனால் நான் நிஜத்திலும் பள்ளி மாணவி போன்றே இருப்பதால் அப்படியே நடித்தேன். அதோடு சிறு வயதிலேயே தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கி விட்ட எனக்கு, அந்த படத்தில் யூனிபார்ம் அணிந்து நடித்தது சந்தோசமாக இருந்தது. அதை நடிப்பு என்பதை மறந்து நிஜ பள்ளி மாணவியாகவே கருதி நடித்தேன். அதனால் பென்சில் படத்தில் எனது நடிப்பு ரொம்ப நேச்சுரலாக இருக்கும். அதோடு அப்படம் திரைக்கு வரும்போது மாணவர்களின் உதடுகளில் எனது பெயர் அழுத்தமாக ஒட்டிக்கொள்ளும். அப்படியொரு பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறேன்.
* மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்திருப்பது எப்படி உள்ளது?
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தபோது எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. அதனால் தமிழில் டயலாக் பேசி நடிக்க அவர் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். பல காட்சிகளில் நான் எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு நடிப்பு பயற்சிகூட கொடுத்தார். அந்த வகையில், அந்த படத்தில் எனது நடிப்புக்கு ஓரளவு நல்ல பெயர் கிடைத்தது என்றால் அதற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம். அதனால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிப்பது எனக்கு இன்னும் பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.
* உங்கள் அழகை ரசிகர்கள் எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள்?
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் எனது சிரிப்புக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். என் சிரிப்பை பல பூக்களுடன் ஒப்பிட்டு விதவிதமாக வர்ணிக்கிறார்கள். இன்னும் சிலர் கண்களை வர்ணிக்கிறார்கள். இன்னும் சிலர் என் அழகுக்கு மதிப்பெண்களை வாரி வழங்கி என்னை ஒரு தேவதை போன்றே குறிப்பிடுகிறார்கள். ஆக ரசிகர்களின் புகழ்ச்சி மழையில் நனைந்து திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறேன். அதனால் நான் நடிக்கிற படங்களில் எப்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேனோ அதேபோல் அழகு தேவதையாக காட்சி கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். அதனால் பாடல் காட்சிகளில் புதுமையான காஸ்டியூம்களில் என்னை வெளிப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறேன்.
* சினிமாவில் உங்களுக்கு போட்டியாக எந்த நடிகையை நினைக்கிறீர்கள்?
சினிமாவில் வெற்றி தோல்விதான் நம்மை தீர்மானிக்கிறது. அதனால் நடிகைகளுடன் போட்டிபோட்டு எந்த பயனும் இல்லை. அதனால் நான் யாரையும் எனக்கு போட்டியாக நினைப்பதே இல்லை. மேலும், நான் ஏற்றுக்கொள்ளும் கேரக்டர்களைதான் ஒன்றுக்கொன்று போட்டி மனப்பான்மையுடன் நடிக்கிறேன். அந்த வகையில் முந்தைய படத்தைவிட இந்த படம் இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனநிலையுடன் நடிக்கிறேன். அதனால்தானோ என்னவோ படத்துக்குப்படம் என் நடிப்பு மெருகேறிக்கொண்டே வருவதாக சில டைரக்டர்கள் சொல்கிறார்கள்.
* உங்கள் கனவில் அடிக்கடி வந்து செல்லும் தமிழ் ஹீரோ யார்?
கனவில் எல்லாம் எந்த ஹீரோவும் வந்து செல்லவில்லை. நிஜத்தில்தான் அஜீத், விஜய், சூர்யா என்று மாறி மாறி என் மனதில் வந்து செல்கின்றனர். காரணம், இவர்களுடனெல்லாம் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருப்பதுதான். தற்போது சுசீந்திரன் போன்ற சிறந்த டைரக்டர்களின படங்களில் நடிப்பதால் எனது நடிப்பு இன்னும் பேசப்படும் பட்சத்தில் வெகுவிரைவிலேயே எனது விருப்ப ஹீரோக்களுடன் டூயட் பாடும் சந்தர்ப்பங்கள் கைகூடி வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஸ்ரீதிவ்யா.